கோவை: தமிழ் கடவுள் முருகனின் பிரசித்தி பெற்ற திருத்தலமான மருதமலையில், பார்க்கிங் வசதி குறைபாட்டால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: தமிழ் கடவுள் முருகனின் பிரசித்தி பெற்ற திருத்தலமான மருதமலையில், பார்க்கிங் வசதி குறைபாட்டால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோவில்.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகாமையில் உள்ள முருகன் திருத்தலம் என்பதால், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வாரந்தோறும் இங்கு வந்து முருகனைக் கும்பிட்டு முறையிட்டுச் செல்கின்றனர்.
விசேஷ நாட்கள்
பொதுவாகவே மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த திருத்தலத்தில், விசேஷ நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம், மக்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கும். திருமணம் செய்யும் பொருட்டு பக்தர்களும் அவர்களது உறவினர்களும், தை பூசம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

இதில் சிலர் தங்களது வாகனங்களை மலை அடிவாரத்திலேயே நிறுத்திவிட்டு, படிக்கட்டுகள் வழியாகவே கோவிலுக்கு செல்வார்கள். சிலர் வாகனங்கள் மூலம் மலைப்பாதையில் பயணம் செய்து கோவிலுக்கு அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல, மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பார்க்கிங்
இந்நிலையில், கோவிலுக்கு மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சன்னிதானத்தின் அருகில் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பார்க்கிங்-கில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பாரத் பழனிச்சாமி என்ற பக்தர் கூறுகையில், "வாரம் ஒரு முறை இக்கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து செல்கிறேன். சில நாட்கள் வாகனத்தை நிறுத்த இடமில்லாமல் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்லும் சூழல் உள்ளது. இதனைத் தடுக்க இங்கு உள்ள பார்க்கிங் இடத்தை பல அடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்ற வேண்டும்." என்றார்.
"முன்பெல்லாம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை தரிசிப்பார்கள். ஆனால், இந்த நவீன காலத்தில் அனைவரும் வாகனத்தில் தான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் வாகனத்தில் சென்றால் பரவாயில்லை. ஆனால், நடக்க முடிந்தவர்கள் கூட படி ஏற விரும்புவதில்லை." என்கின்றனர் அங்குள்ள மக்கள்.

இது குறித்து மற்றொரு பக்தர் ராஜ்குமார் கூறுகையில், "மலை அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் உள்ளது. ஆனால், அங்கு நிறுத்தி விட்டு மேலே கோவிலுக்கு நடந்து செல்லவதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே மேலே மலைப்பகுதிகள் வண்டிகள் நிறுத்த இடமில்லாமல் போய்விடுகிறது. இதனால் உடல் நிலை சரியில்லாதவர்களும், வயதானவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்." என்றார்.
பேருந்து வசதி உள்ளதே?
"சிரமம் இல்லாமல் கோவிலுக்கு செல்லத்தான் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே." என்கின்றனர் கோவில் ஊழியர்கள்.
இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலை அடிவாரத்தில் இருந்து மேலே இருக்கும் கோவிலுக்கு செல்ல வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மேலே அனுமதிப்பதில்லை. அதற்கு மாற்றாக பேருந்து சேவையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். அது போக அடிவார பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்த தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்றார்.

தற்போது பழனி முருகன் கோவிலில் உள்ளது போலவே மருதமலை முருகன் கோவிலில் ரோப் கார் சேவை ஆரம்பிக்க உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ரோப் கார் சேவை தொடங்கப்பட்டால் அது பக்தர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

கோவில் நிர்வாகம் பேருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்திய போதிலும், சன்னிதானத்தை நோக்கி வாகனங்களில் பயணிக்கவே இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகின்றனர். மன நிம்மதிக்காக கோவிலுக்கு வரும் அவர்களின் மனதை புண்படுத்தாமல், கோவிலின் அருகே தற்போது இருக்கும் பார்க்கிங்-கை இன்னும் மேம்படுத்தும் போது, முருகனை கும்பிட்ட வரும் பக்தர்களின் உள்ளம் இன்னும் கொஞ்சம் குளிரும்....